மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி தருமபுரம் ஆதீனம் வழக்கு
மதுரை: மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர். அவர்களிடமிருந்து மதுரை ஆதீனத்தை மீட்டு அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தருமபுரம் ஆதீனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தருமபுரம் ஆதீன மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி அவர் கூறியதை செயல்படுத்தி உள்ளார்.
தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவினை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர்.
ஒரு இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை.
இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தினை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார்.
அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மதுரை ஆதீனத்தை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்தப் புதிய வழக்கால் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் சிக்கல் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications