தமிழீழம் அமைய மத்திய அரசை நிர்பந்திப்பாரா கருணாநிதி?: ராமதாஸ்
சென்னை: மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு கருணாநிதி சாதாரண மனிதர் அல்ல. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மிக மூத்த தலைவர் கருணாநிதி தான். இவ்வளவு செல்வாக்கு உள்ளவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதை விட்டுவிட்டு, தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி காங்கிரஸ் தலைமையை நிர்பந்திக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை ஒன்றினைத்து "தமிழீழம்' அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக தமிழீழம் ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தி.மு.க. தலைவர் தெரிவித்திக்கிறார்.
இலங்கை இனச் சிக்கலுக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு என்பதில் தமிழ் உணர்வாளர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் எவரும் மறுக்க முடியாது.
ஆனால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழீழம் அமைப்பதற்காக அல்லது ஈழத் தமிழர் படுகொலையை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத கருணாநிதி, ஆட்சிபொறுப்பை இழந்த பிறகு தமிழீழம் அமைத்தே தீருவேன் என்று முழங்க தொடங்கியிருப்பதுதான் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிக்கிறது.
அதுமட்டுமின்றி டெசோ அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துவிட்ட போதிலும், தமிழீழம் அமைப்பதற்கான அதன் செயல்திட்டம் என்ன என்பது அறிவிக்கபடவில்லை. மாறாக தனித் தமிழீழம் அமைக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐ.நா. மூலம் பொது வாக்கெடுபு நடத்த முயற்சி மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்று கூறியிருப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு கருணாநிதி சாதாரண மனிதர் அல்ல. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மிக மூத்த தலைவர் கருணாநிதி தான்.
இவ்வளவு செல்வாக்கு உள்ளவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதை விட்டுவிட்டு, தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி காங்கிரஸ் தலைமையை நிர்பந்திக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் வரும் மே 22ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது தனி தமிழீழம் அமைப்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை கருணாநிதி முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதேப்போன்ற தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இதற்காக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
டெசோ அமைப்பின் குறிக்கோளை நிறைவேற்றும் நோக்குடன் இலங்கை இனச்சிக்கலுக்கு தனி தமிழீழம் அமைப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற உண்மை நிலையை வட இந்திய தலைவர்களுக்கும், உலக நாடுகளின் தலைவர்களுக்கும் உணர்த்தவும், அவர்களின் ஆதரவை திரட்டவும் தேவையான நடவடிக்கைகளையும் உடனே தொடங்கும்படி திமுக தலைவர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன் என்று ராமதாஸ்












Click it and Unblock the Notifications