கைதிகளுக்கு கோழிக்கறி, கேசரி: சட்டசபையில் அமைச்சர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சிறைக் கைதிகளில் அசைவ உணவு சாப்பிடும் அனைவருக்கும் வாரம் ஒரு முறை 115 கிராம் கோழி இறைச்சியும், சைவ உணவு சாப்பிடும் கைதிகளுக்கு வாரம் ஒரு முறை உருளை கிழங்கு கறி, கேசரி, 1 வாழைப்பழம் வழங்கப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.

சட்டசபையில் சிறைத்துறை மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் உள்ள சிறைக் கைதிகளில் அசைவ உணவு சாப்பிடும் அனைவருக்கும் வாரம் ஒரு முறை 115 கிராம் கோழி இறைச்சியும், சைவ உணவு சாப்பிடும் கைதிகளுக்கு வாரம் ஒரு முறை உருளை கிழங்கு கறி, கேசரி, 1 வாழைப்பழம் வழங்கப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் மருத்துவ உணவாக பால், ரொட்டி, முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது. சிறையில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் நல்ல உணவு கைதிகளுக்கு வழங்கப்படுகிறது.

சுத்தத்தை உறுதிப்படுத்த கைதிகளுக்கு எவர்சில்வர் தட்டு, குவளை வழங்கப்படுவதோடு எவர்சில்வர் சமையல் பாத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிக் கைதிகளுக்கு கூடுதலாக பால் வழங்கப்படுகிறது. ஆடைகள் மற்றும் படுக்கைகள் சிறை நடைமுறை புத்தகத்தில் உள்ள விதிப்படி வழங்கப்படுகிறது.

தண்டனை கைதிகளுக்கு டெரிகாட்டன் சட்டை, அரைக்கால் சட்டைகள், பெரிய தரை விரிப்புகள் வழங்கப்படுகிறது. புதிதாக ஜெயிலுக்கு செல்லும் விசாரணை கைதிகளுக்கும் போதிய உடைகள் வழங்கப்படுகிறது.

மத்திய சிறை, சப்-ஜெயில்களில் அடிப்படை வசதிகளும் துப்புரவு வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்படுகிறது. சிறையில் உள்ள ‘ஆ’ வகுப்பு தண்டனை கைதிகளுக்கான சீருடையை அரைக்கால் சட்டையில் இருந்து முக்கால் சட்டையாக மாற்ற ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறையில் தண்டனை கைதிகள் வேலை பார்க்கும்போது ஒரு நாளைக்கு ரூ..60, ரூ.50, ரூ.45 என வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது இதை ரூ.100, ரூ.80, ரூ.60 ஆக வகைப்படுத்தி வழங்கப்படுகிறது. தமிழக சிறைகளில் மொத்தம் 2,374 தண்டனை கைதிகள் பட்டப்படிப்பு, இலக்கியப்படிப்பு, கம்ப்யூட்டர் படிப்பு உள்பட பல்வேறு படிப்புகளை படிக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

போலீசாருக்கு 36,000 வீடுகள்-ஜெயலலிதா:

இந் நிலையில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்தாவது,

மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது, அல்லும் பகலும் அயராது மக்களின் உயிரையும், உடைமையையும் பாதுகாக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு தங்கள் சொந்த நலன்களைப் பற்றி சிந்திக்க நேரம் இருப்பதில்லை.

மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் நலன் காக்கும் வண்ணம், அவர்களுக்கென ஒரு சொந்த இல்லம் கட்டித் தரும் பொருட்டு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் இதுவரை 12 இடங்களில் 1,985 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு போதுமான அளவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்த நான், கடந்த 24.4.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, காவலர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க ஆவன செய்ய இந்த அரசு ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்தும் என அறிவித்திருந்தேன்.

இதன்படி, ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ், காவல் துறையில் காவலர்கள் முதல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்போர் முதல் கோட்ட அலுவலர் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும் சொந்த வீடு கட்டித்தர தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 10 ஏக்கர் நிலமும், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் 100 ஏக்கர் நிலமும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்திற்கென ஒதுக்கீடு செய்து தரப்படும். கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதி கழகம் மேற்கொண்டு வீடுகளை கட்டிக் கொடுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவலர்கள், தலைமைக் காவலர்கள், தீயணைப்போர், முன்னிலை தீயணைப்போர், மற்றும் உதவி நிலைய அலுவலர்கள் ஆகியோருக்கு 650 சதுர அடி கொண்ட வீடுகளும்; உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், கோட்ட அலுவலர்கள் மற்றும் உதவிக் கோட்ட அலுவலர்கள் ஆகியோருக்கு 850 சதுர அடி கொண்ட வீடுகளும்; காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோட்ட அலுவலர்களுக்கு 1100 சதுர அடி கொண்ட வீடுகளும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால் லாப நோக்கமின்றி கட்டித்தரப்படும்.

இந்த வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 36,000 குடியிருப்புகள் கட்டப்படும். காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது இடவிருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்படும்.

இந்த வீடுகளுக்கான விலையை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் அவரவர் விருப்பத்திற்கேற்ப முழுவதும் ரொக்கமாகவோ அல்லது மாதத் தவணையிலோ செலுத்த வழிவகை செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+