முல்லைப் பெரியாறு: ஐவர் குழு அறிக்கையை தமிழக, கேரளாவுக்கு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு ஆனந்த் தலைமையிலான ஐவர் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். இந்தக் குழு அணையை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தும், பல்வேறு குழுக்களிடமிருந்து பெற்ற அறிக்கைகளின் அடிப்படையிலும் சமீபத்தில் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை இன்று நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கையின் நகலை தங்களுக்குத் தர வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் கேரள அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இரு அரசுகளுக்கும் அறிக்கை நகலை வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 23ம்தேதி நடைபெறும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
முன்னதாக கேரள அரசின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ஹரீஷ் சால்வே மற்றும் ராஜீவ் தவன் ஆகியோர் வாதிடுகையில், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைக் காண கேரள அரசு விரும்புவதாக கூறினர். மேலும், இரு மாநில அரசுகளும் அமர்ந்து பேசி சுமூகமான அறசியல் தீர்வை எட்ட வேண்டும் என்றனர்.
ஐவர் குழு அறிக்கையில் தமிழகத்திற்கு பெருத்த சாதகமான முடிவுகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் கொண்டே பேசித் தீர்க்கலாம் என்று கேரள அரசு பல்டி அடித்திருப்பதாக தெரிகிறது. ஐவர் குழு அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை நல்ல பலத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளது. எனவே அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications