பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக முன்நிறுத்துவதற்கு வாய்ப்புகள் குறைவு?
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டாலும் பிரணாப்புக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த விவகாரத்தில் ஊசலாட்டமான மனநிலையே இருப்பதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியே வேட்பாளராக இருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு ஊடகங்கள் அனல் பறக்க விவாதங்களை முன் வைக்கின்றன. ஆனால் பிரணாப்பை நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து கட்சிப் பொறுப்பிலிருந்தும் விடுவித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தினால் ஏற்படும் இழப்புகளை காங்கிரஸ் கட்சி கணக்கிட்டால் பிரணாப் குடியரசுத் தலைவராவதற்கான சாத்தியம் மிகவும் குறைவே என்கிறது அரசியல் வட்டாரம்..
30 ஆண்டுகால கனவு...
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டிலேயே தம்மை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்திக் கொண்டவர் பிரணாப். அவரைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பது நிறைவேறாத 30 ஆண்டுகால கனவுதான் என்று சொல்ல வேண்டும். தன்னை பிரதமராக அறிவிக்க அப்போது பிரணாப் முயற்சித்ததால் ராஜிவ் காந்தியின் கோபத்துக்கு ஆளானவர். இருப்பினும் அவரது சீனியாரிட்டியும் சின்சியாரிட்டியும் ராகுல்காந்தி காலம் வரை தாக்குப் பிடித்து நம்பர் 2- என்ற நிலையில் இருக்க வைத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, கூடுதல் இடங்களைப் பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் நிச்சயமாக பிரணாப்பை குடியரசுத் தலைவராக்கி ஒதுக்கிவிட காங்கிரஸ் முடிவு செய்யாது.
சமரச தூதர்
அதேபோல் காங்கிரஸ் கட்சி ஒன்றும் தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸை அசைத்துப் பார்க்கக் கூடிய கூட்டணிக் கட்சிகளுடன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஆட்சி அமைத்திருக்கிறது. ஏதோ ஒரு விவவாகரத்தில் எப்படியாவது ஒரு கூட்டணிக் கட்சி முறுக்கிக் கொண்டுதான் நிற்கும். குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கக் கூடிய திமுகவும் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸும் தவிர்க்க முடியாத கட்சிகள்.
இந்த இரண்டு கட்சிகளும் முறுக்கிக் கொண்டால் சமரச தூதராக சென்று சாதிக்கக் கூடியவராக இருப்பவரும் பிரணாப் முகர்ஜிதான். இன்னும் இரண்டு ஆண்டுகாலத்துக்கு சிந்தாமல் சிதறாமல் ஆட்சி காலத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கருதுமேயானால் நிச்சயம் பிரணாப்பை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வழி அனுப்பி வைக்காது அந்தக் கட்சி.
மேலும் 2014-ம் ஆண்டு தொங்கு நாடாளுமன்றம் அமையும் நிலையில் தமது 30 ஆண்டுகால கனவான பிரதமர் பதவியை நிறைவேற்றிக் கொள்ளத் தருணம் வந்தால் என்ன செய்வது என்று பிரணாப்முகர்ஜி கணக்குப் போட்டால் நிச்சயம் அவர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் போவதை விரும்பமாட்டார்தான்...












Click it and Unblock the Notifications