தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தால் மாநில உரிமைகளுக்கு பாதிப்பு இல்லை: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநில முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம், உரிமை பாதிக்கப்படாது. தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த இது உதவும். மத்திய- மாநில அரசுகளிடையே எந்த மோதலையும் ஏற்படுத்தாது. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும்.
இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சினை அல்ல. தீவிரவாதத்துக்கு எதிராக நாம் இணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. நாடு முழுவதும் உளவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தடுப்பு மையமானது நாம் இணைந்து செயலாற்றுவதற்காக பயணம் செய்யக்கூடிய வாகனமாக கருத வேணடும்.
கார்கில் போருக்கு பின் நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து இந்த மையம் ஆலோசனைகள், வழிமுறைகள் சொல்லும் மாநில அரசுகளை இது பலவீனப்படுத்தாது. இந்த மையம் எப்படி செயல்படும் என்பதை உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் முறைப்படி தெரிவிக்கும். அதன் அதிகாரங்கள், செயல்பாடுகள், மத்திய, மாநில அரசுகள் இதில் எப்படி ஒருங்கிணைத்து செயல்படுவது என்பதும் முறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
முன்னதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
தேசிய தீவிரவாத தடுப்பு மையமானது நமது புதிய பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கியமான தூண் ஆகும். நமது நாடு 7,516 கி.மீ. தூர கடற்கரையையும், 15,106 கி.மீ. சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. நம்மைச் சுற்றிலும் அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், சீனா, வங்களதேசம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் உள்ளன. இதன் மூலம் நமது நாடு சர்வதேச முக்கிய வாயிலாக உள்ளது. தரை வழியாக மட்டுமல்லாது கடல் வழியாகவும், ஆகாயம் மற்றும் வான் வழியாகவும் நமக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சைபர் கிரைம்களை கண்டுபிடிக்கும் நமது உள் கட்டமைப்புகள் பொய்த்தோற்றம் கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் நிதி மோசடி, பொருளாதார குற்றம் உள்பட பலமுறை கேடுகள் நடைபெறுகின்றன. இவை தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை. வான்வழியாக நடைபெறும் சைபர் குற்றங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வான்வழியாக நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது. இதில் மத்திய- மாநில அரசுகள் அதில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.