கே.டி.தாமஸுக்கு எதிராக கேரளாவில் போர்க்கொடி-வீடு நோக்கி பேரணி-அமைச்சர் சாடல்!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஐவர் குழுவின் இறுதி அறிக்கையில், கேரளாவுக்கு சாதகமாக எதுவும் இல்லாததால் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மாநிலப் பிரதிநிதியான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸுக்கு எதிராக அந்த மாநிலத்தினர் திரும்பியுள்ளனர். தாமஸை, கேரள அமைச்சர் பி.ஜே.ஜோசப் கடுமையாக கண்டித்துள்ளார். அதேபோல போராட்டக்காரர்கள், தாமஸ் வீட்டை நோக்கி பேரணி சென்று அவரை சரமாரியாக திட்டித் தீர்த்தார்கள்.
இதனால் கே.டி.தாமஸ் கடும் ஆத்திரமடைந்துள்ளார். பி.ஜே.ஜோசப்பை அவர் கடுமையாக கண்டித்துள்ளார். நீங்கள் சொல்வது போல செயல்பட என்னை உச்சநீதிமன்றம் நியமிக்கவில்லை என்று அவர் ஆத்திரத்துடன் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதில் தமிழக பிரதிநிதியாக முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
இருவரும் தத்தமது மாநிலங்களின் நிலையை, ஆணித்தரமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் வைத்தனர். இதில் தமிழகத் தரப்பின் நியாயமே இறுதியில் வென்றுள்ளது. இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணையை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தபோதே நீதிபதி தாமஸின் தலையீடு அதிகம் இருந்ததை அனைவரும் அறிந்தனர். கேரளத் தரப்புக்கு சாதகமாகத்தான் அவர் தொடர்ந்து நடந்து வந்தார்.
கேரள அரசும் தாமஸையே நம்பியிருந்தது. ஆனால் உண்மைதானே வெல்ல முடியும்... எனவே இறுதி அறிக்கையில் தமிழகத்திற்குச் சாதகமாகவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளத்தினரின் கோபம் தற்போது தாமஸ் மீது திரும்பி விட்டது.
குறிப்பாக அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரான பி.ஜே.ஜோசப், தாமஸை கடுமையாக கண்டித்துள்ளார். அவர் அறிக்கை குறித்துக் கூறுகையில், இந்த அறிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். நீதிபதி தாமஸ் கேரளாவுக்கும், அதன் மக்களுக்கும் சார்பாக ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இது தாமஸை கடுப்பாக்கியுள்ளது. ஜோசப்புக்கு அவர் சூடான பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழு மூலம்தான் புகார் தெரிவிக்க வேண்டும். ஜோசப் சொல்வதைக் கேட்டு்ச செய்வதற்காக என்னை உச்சநீதிமன்றம் நியமிக்கவில்லை. ஜோசப் கட்டுப்பாட்டோடு பேச வேண்டும்.
முதலில் அவர் அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும். மாறாக மக்களின் உணர்வுகளை, கோபத்தைத் தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார். இது தவறானது.
நான் நீதிபதி. இரு மாநிலங்களுக்கும் பொதுவானதைத்தான் நான் சொல்லியுள்ளேன். என்னை கேரளாக்காரன் என்றோ, தமிழ்நாட்டுக்காரன் என்றோ கூறுவதில் அர்த்தம் இல்லை என்று கூறினார்.
தாமஸ் வீடு நோக்கி ஊர்வலம் போய் திட்டு...
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் கோட்டயத்தில் உள்ள தாமஸின் வீடு நோக்கி பேரணி நடத்தியுள்ளனர். அவர்கள் தாமஸை கடுமையாக தாக்கிப் பேசினர். திட்டினர். தாமஸ், கேரளாவுக்கு பாதகமாக நடந்து கொண்டு விட்டதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதையடுத்து தாமஸின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications