கொலை வழக்குகளில் கண்மூடித்தனமான ஜாமீன் வழங்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

வழக்கு என்ன?
கொலை வழக்கு ஒன்றில் ஒடிசா உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. ஆனால் அவர்களை கீழ் நீதிமன்றம் முன்பாக சரணடையுமாறும், சரணடையும்போது தகுதியிருப்பதாக கருதினால், நிபந்தனை ஜாமீன் கொடுக்குமாறு கீழ் நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இதை எதிர்த்து கொலையானவரின் சகோதரி ரஷ்மி ரேகா தட்டோய் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் அவசியமானதுதான். ஆனால் ஜாமீன் அளிக்கும்போது சட்ட விதிகளை நீதிமன்றங்கள் மீற முடியாது' என்று கூறினர்.
நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா பெஞ்ச் அளித்த தீர்ப்பு:
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடையும்போது அவர்களுக்கு தகுதியிருந்தால் நிபந்தனைகளுடன் ஜாமீன் அளிக்குமாறு உயர் நீதிமன்றங்கள் முந்தைய காலங்களில் உத்தரவிட்டதாக தெரியவில்லை. ஜாமீன் வழக்கில் மேல் நீதிமன்றங்கள் இது போன்று கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தெரியவில்லை.
முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுக்கும்போது, கைது நடவடிக்கையை தவிர்க்கும் விதமான பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றத்தால் வழங்க முடியாது.
இந்த வழக்கில் சட்ட விதிகளும், முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட மேற்கோள்களும் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக ஜாமீன் வழங்க முடியாது. இடைக்கால உத்தரவை மட்டுமே வழங்க முடியும். அதுவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டே இடைக்கால உத்தரவை வழங்க முடியும்.
சரணடைபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூறும் உத்தரவு சட்டப்படி செல்லாது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதோடு, கீழ் நீதிமன்றங்களின் அதிகாரங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications