''நமஸ்தே தீதி''... மமதாவுடன் ஹில்லாரி கிளிண்டன் சந்திப்பு-முக்கியப் பேச்சு!

டைம்ஸ் இதழால், உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் ஹில்லாரியும், மமதாவும். எனவே இவர்களின் இந்த சந்திப்பு ஆர்வத்தை கிளறி விட்டுள்ளது.
ஏற்கனவே பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வரும் தனது மேற்கு வங்க மாநிலத்திற்கு பெருமளவிலான அமெரிக்க முதலீடுகளைக் கவர இந்த வாய்ப்பை மமதா பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய சந்திப்பின்போது மமதாவிடம் நமஸ்தே என்று கூறிய ஹில்லாரி கிளிண்டன் கை கூப்பி கும்பிட்டும் பின்னர் கை குலுக்கியும் அவரை ஆச்சரியப்படுத்தினார். முன்னதாக சந்திப்பு குறித்து ஹில்லாரி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சில்லறை வணிகத்தில் இந்தியாவில் பெருமளவிலான சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை தான் வலியுறுத்தப் போவதாக கூறினார்.
சில்லறை வணிகத்தில் 51 சதவீத அளவுக்கு நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது மமதா பானர்ஜிதான் அதைத் தலையிட்டு நிறுத்தி வைக்கச் செய்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே ஹில்லாரியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. அதுகுறித்து அவர் மமதாவிடம் முக்கியமாகப் பேசுவார் என்று தெரிகிறது.
இந்த நேரடி அன்னிய முதலீடுத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், வால்மார்ட் போன்ற பெரிய பெரிய அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் பெருமளவில் படையெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள சில்லறை வணிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வணிகர்களுக்கு மமதாவும் தீவிரஆதரவு தெரிவித்து வருகிறார். எனவே இதுகுறித்து மமதாவிடம் ஹில்லாரி பேசப் போவது என்ன, அதற்கு மமதா எப்படி ரியாக்ட் செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதுதவிர டீஸ்தா நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் குறித்தும் ஹில்லாரியும், மமதாவும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம் இடையிலான இந்த ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் மமதா பானர்ஜியின் கடும் எதிர்ப்பு காரணமாக இதை நிறுத்தி வேண்டியதாயிற்று.
எனவே ஹில்லாரியின் இன்றைய சந்திப்பானது, இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளின் சார்பில் மமதாவுக்கு விடப்படும் தூதாகவும் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்திய, வங்கதேச அரசுகளின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அந்த அரசுகளின் சார்பில் மமதாவிடம் ஹில்லாரி பேசி சரி செய்ய முயற்சிப்பது போலவும் தெரிகிறது.
கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் டெல்லி செல்கிறார் ஹில்லாரி. அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications