ஸ்டாலினை திமுக தலைவராக்க இளைஞரணி கோரிக்கை!

திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்தது. கூட்டத்தைத் துவக்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் தொகையை இழந்துவிட்டது. இருப்பினும் மிகுந்த எழுச்சியோடு இருக்கிறது. இளைஞர் அணியில் ஒன்றிய அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் இன்னும் ஐந்தாறு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்றார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர்கள் பேசுகையில், ஸ்டாலினை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் இளைஞர் அணியில் இருப்பதற்கான வயது வரம்பு இப்போது ஒன்றிய அளவில் 30 வயதுக்குள்ளும், மாவட்ட அளவில் 40க்குள்ளும் இருந்து வருகிறது. இதில் மாவட்ட அளவிலான வயது வரம்புக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வரம்பை 45 வயதாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினர்.
மாவட்ட நிர்வாகிகள் வயது வரம்பை 45 வரை உயர்த்த வேண்டும் என்பதை கருணாநிதியோடு ஆலோசித்து சொல்வதாக ஸ்டாலின் பதிலளித்தார்.
ஸ்டாலின் குடும்பத்துடன் வெளிநாடு பயணம்:
இந் நிலையில் சிகிச்சைக்காக ஸ்டாலின் லண்டன் செல்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்.
திங்கள்கிழமை இரவு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் ஸ்டாலின் அங்கு சிகிச்சை முடிந்தவுடன், நெதர்லாந்துக்கு குடும்பத்துடன் செல்கிறார்.
சுமார் 2 வாரங்களுக்கு மேல் வெளிநாடுகளில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்துவிட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications