மதுரை சைக்கிள் குண்டு வெடிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

மதுரையில் சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில், பாஜகவின் மாநில மாநாடும் நடக்க இருந்த நிலையில் கடந்த 1ம் தேதி அதிகாலை மதுரை அண்ணா நகர் பகுதியில் ஒரு தியேட்டர் அருகேயுள்ள திருமண மகாலின் பின்புறம் உள்ள ராமர் கோவிலுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.
சைக்கிள் கேரியரில் ஒரு டப்பாவில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. டைமருடன் கூடிய அந்த குண்டு வெடித்ததில் யாரும் காயமடையவில்லை.
கோவில் அருகே வெடிக்கும்படி இந்த குண்டு வைக்கப்பட்டதல் ராமர் கோவிலை தகர்க்கும் நோக்கத்தில் நடந்த சதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இது குறித்து மதுரை டவுன் உதவி கமிஷனர் வெள்ளைத்துரையின் கண்காணிப்பில் 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை கரும்பாலையைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், இந்த மூவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். அவரிடம் மதுரை கமிஷனர் சஞ்சய் மாத்தூர், டிஐஜிக்கள் பாலநாகதேவி, அமல்ராஜ், எஸ்பி அஸ்ரா கார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு குண்டு வெடிப்பில் தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து சிறப்புப் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி மாரிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட, அவர்கள் 20 குழுக்களாக பிரிந்து பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications