தமிழ்நாட்டில் 'சாப்பாட்டுக்கே வழியில்லை' என்று யாரும் கூற முடியாது: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று யாரும் கூற முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்,

பார்த்தசாரதி (தேமுதிக): மாநிலத்தில் புதிய பஸ்கள் அதிக அளவில் விடப்பட வேண்டும்.

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி: திமுக ஆட்சியில் ஓடிய பழைய பஸ்களை மாற்ற புதிதாக 7,432 பஸ்களை புரட்சித் தலைவி தந்துள்ளார். தற்போது புதிய பஸ்களின் கூண்டு கட்டப்பட்டு வருகிறது. மேலும் திமுக ஆட்சியில் 698 சாதாரண பஸ்கள்தான் ஓடின. எல்.எஸ்.எஸ்., எம். சர்வீஸ் பஸ்கள் என்று விதவிதமாக பெயர் எழுதி பல கலர்களில் பஸ்கள் விடப்பட்டு கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டது. ஆனால் புரட்சித் தலைவி ஆட்சியில் 51 சதவீத பஸ்கள் சாதாரண பஸ்களாகதான் இயக்கப்படுகிறது.

பார்த்தசாரதி: மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. பல குடும்பங்களில் இதனால் சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையைக் காண முடிகிறது.

முதல்வர் ஜெயலலிதா: விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படாதது போல் உறுப்பினர் கூறுகிறார். விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு நஷ்டஈட்டை நிர்ணயம் செய்வது நீதிமன்றம்தான், அரசு கிடையாது. எனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்து விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவில் நஷ்டஈடு கிடைக்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வரும்போது இந்த அரசு உடனடியாக உதவிகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் அரிசி பெறும் குடும்ப ரேசன் கார்டுகள் 1 கோடியே 83 லட்சமாகும். இந்த அனைத்து கார்டுகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் யாரும் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று யாரும் கூற முடியாது. அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பு வழங்கிய அரசு எனது தலைமையிலான அரசு.

பார்த்தசாரதி:
போக்குவரத்து கழக அதிகாரிகள் சிறுசிறு பிரச்சனைகளுக்கு தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்தி தற்காலிக வேலை நீக்கம் செய்கிறார்கள்.

ஜெயலலிதா: பொத்தாம் பொதுவாக இப்படி குற்றம் சாட்டக்கூடாது. எந்த அதிகாரி யார் மீது நடவடிக்கை எடுத்தார் என்பதை சொன்னால்தான் அதற்கான விசாரணையை இந்த துறை மேற்கொள்ள முடியும். உறுப்பினர் இந்த அவையில் ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறார். அவரிடம் விவரம் இருந்தால் முதலில் அதை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் அமைச்சருக்கு அனுப்பி வைப்பார். அதன்பிறகு விளக்கம் கேட்டு பதில் கொடுக்க முடியும். ஆனால் இந்த அவையில் திடீரென ஒரு குற்றச்சாட்டை கூறினால் அதற்கு விளக்கமான பதில் அமைச்சரிடம் தயாராக இருக்காது.

அமைச்சர்: ஓட்டுனர், நடத்துனர்களை பழிவாங்கிய அரசு திமுக அரசு. அவர்களை தொழிற்சங்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தி திமுக ஆட்சியில் பழி வாங்கினர். ஆனால் இப்போது தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்கள் நலன் காக்கும் அரசாக புரட்சித் தலைவி அரசு செயல்படுகிறது. யார் மீதும் உடனே இந்த அரசு திடீரென நடவடிக்கை எடுக்காது. ஏதாவது ஒரு தவறு அல்லது விபத்து ஏற்பட்டிருந்தால் அது தெரிந்து நடந்த தவறா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று விசாரித்துதான் இந்த அரசு கவனமுடன் கையாள்கிறது. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக புரட்சித் தலைவி அரசு செயல்படுகிறது. தெரிந்தே போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுத்துபவர்கள் மீதுதான் இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

பார்த்தசாரதி: விபத்து நடந்தவுடன் டிரைவர் ஜாமீனில் வந்து விடுகிறார். ஆனால், அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அமைச்சர்: விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை சட்டம் கொண்டு உடனே ரத்து செய்தது திமுக அரசு தான். ஆனால் புரட்சித் தலைவி ஆட்சியில் உடனே லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதில்லை. விபத்து குறித்து உண்மையிலேயே அரசு பஸ் டிரைவர் விபத்து ஏற்படுத்தினாரா அல்லது எதிரே வந்தவர் விபத்து ஏற்படுத்தினாரா என தீர ஆராய்ந்து ஒருமுறைக்கு 2 முறை தொழிலாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரும் அரசுதான் இந்த அரசு என்றார்.

தொடர்ந்து பார்த்தசாரதியின் கேள்விகளுக்கு பதிளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், பஸ் விட வேண்டுமென்றால் உடனே விட முடியாது. டெண்டர் விட வேண்டும், பாடி கட்ட வேண்டும்.. இப்படி பல்வேறு கட்டங்களாக பஸ் வெளியே வர 3 மாதம் கால தாமதம் ஆகும். தற்போது மாதம் 300 முதல் 400 பஸ்கள் கூண்டு கட்டப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் பஸ்களுக்கு தனியாரிடமும் கொடுத்து கூண்டு கட்டினார்கள். ஆனால் புரட்சித் தலைவியின் ஆட்சியில் புதுப்பொலிவுடன் புதிய பஸ்கள் மாதா மாதம் அரசே கட்டி வெளியிடுகிறது. விரைவு பஸ்சில் அவசர காலத்தில் பயணிகள் வெளியேறும் வகையில் ஜன்னல் அமைத்து நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் இங்கே பதில் சொல்லும்போது புதிய பஸ் தயாராக 3 மாத காலதாமதம் ஆகும் என்று சொன்னார். அதை கால அவகாசம் என்று திருத்தி கொள்ளுங்கள்.

பார்த்தசாரதி: மலைப் பகுதிகளில் அரசு பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா: இங்கு பேசும் உறுப்பினரின் பேச்சையும், போக்குவரத்து அமைச்சர் சொல்லும் பதிலையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். இதில் இருந்து எனக்கு என்ன தெரிகிறது என்றால் ஏதாவது இந்த அரசு மீது குறை சொல்ல முடியுமா? என்று நினைத்து அது முடியாதபட்சத்தில் திமுக ஆட்சியில் என்னென்ன தவறு நடந்ததோ அதை இந்த ஆட்சி காலத்தில் நடந்தது போல் உறுப்பினர் பேசுகிறார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+