சி.பி.எஸ்.இ. பாடத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் கேலிச்சித்திரம்- நாடாளுமன்றத்தில் அமளி
டெல்லி: மத்திய அரசின் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) அம்பேத்கரை நேரு சாட்டையை சுழற்றி அடிப்பது போன்ற கேலிச்சித்திரம் இடம் பெற்றுள்ளதற்கு எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேலிச்சித்திரத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருமாவளவன்
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் ஒன் வகுப்பில் அரசியல் அறிவியல் பாடத்தின் 18-ம் பக்கத்தில் நேரு, அம்பேத்கரை சாட்டையால் அடிப்பது போன்ற கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது. மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் எம்.பி. இந்த கேலிச்சித்திரத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துப் பேசினார். இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
பிரணாப் பதில்
இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அம்பேத்கரை இழிவுபடுத்தும் கார்ட்டூனை வெளியிட்டது தவறு என்று கூறியதுடன் அம்பேத்கரை புகழ்ந்தும் பேசினார்.
ஆனால் அதிருப்தியடைந்த ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் கபில்சிபல் விளக்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதே நேரத்தில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பங்கு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
சிபல் விளக்கம்
பின்னர் அவை கூடியபோதும் இதே விவகாரத்தால் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தால் அமள ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் விளக்கம் அளித்த கபில் சிபல் கூறியதாவது:
அந்த கார்ட்டூன் இனிமேல் விநியோகிக்கப்படாது. அம்பேத்கரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அவரது புகழை களங்கப்படுத்த முடியாது இது அரசியல் விவகாரம் அல்ல. அந்த கார்ட்டூன் புத்தகங்களில் வெளிவந்த 2006-ல் நான் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இல்லெயனினும் இந்த விவகாரத்துக்காக தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த சமுதாயத்தையும் இழிபடுத்தும் நோக்கம் எங்களுக்கில்லை. அந்த கார்ட்டூனை என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களின் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
மாநிலங்களவையில் குழப்பம்
ஆனால் உறுப்பினர்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் ஒத்க்திவைக்கப்பட்டன. பின்னர் மாநிலங்களவையிலும் பிற்பகல் 2.45 மணிக்கு கபில்சிபல் விளக்கம் அளித்தார். ஆனால் உறுப்பினர்கள் இதனை ஏற்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications