மகனுக்கு ஆதாயம் கருதியே ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்தத்தை அனுமதித்தார் சிதம்பரம்- பாஜக
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை ப. சிதம்பரத்தின் மகன் பெற்றுள்ளார். இதைத் அறிந்தே ஒப்பந்தத்துக்கு சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். இதை ஆதாயம் கருதி அவர் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
லோக்சபாவில் நேற்று இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
2006-ம் ஆண்டில் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இந்திய நிறுவனங்களில் 74 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்திய அரசு கடைப்பிடித்து வரும் கொள்கை.
ஆனால் மேக்சிஸ் நிறுவனம் 99.3 சதவீத ஏர்செல் பங்குகளை வாங்கியுள்ளதாக மலேசியப் பங்குச் சந்தையில் பதிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பாக அரசு வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாரியத்துக்குத் தலைவராக அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இருந்துள்ளார்.
மேக்சிஸ் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை ப. சிதம்பரத்தின் மகன் பெற்றுள்ளார். இதைத் அறிந்தே ஒப்பந்தத்துக்கு சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். இதை ஆதாயம் கருதி அவர் செய்துள்ளார். தனது மகனுக்கு இந்நிறுவனத்தில் பங்குகள் உள்ளதாகத் தெரிய வந்தவுடனேயே அது சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திடாமல் சிதம்பரம் பின் வாங்கியிருக்கலாம்.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது தெளிவாகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மத்திய அரசு மூடி மறைக்காமல் வெளிப்படையாக்க வேண்டும் என்றார் சின்ஹா. இதையடுத்தே பாஜகவினர் பெரும் அமளியில் இறங்கினர்.












Click it and Unblock the Notifications