ஜெ. ஆட்சிக்கு வந்த பின் 2வது முறையாக நேருக்கு நேர் மோதும் அதிமுக -தேமுதிக!

அதிமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தை நெருங்கி விட்டது. இந்த ஒரு வருட காலத்தில் தமிழகத்தில் 3 முறை இடைத் தேர்தல் வந்து விட்டது. முதலில் திருச்சி மேற்கில் நடந்தது. அதில் தேமுதிக போட்டியிடவில்லை. மாறாக அதிமுகவும், திமுகவும் அங்கு நேருக்கு நேர் மோதினர். இதில் அதிமுகவென்றது.
அடுத்து சங்கரன்கோவிலில் நடந்த இடைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுகவும், தேமுதிகவும் நேருக்கு நேர் மோதின. இதில் தங்களை எதிர்த்து மோதிய தேமுதிகவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கட்சிகளையும் அதிமுக மோசமான முறையில் தோற்கடித்தது. திமுக, தேமுதிக, மதிமுக என அத்தனைக் கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன.
இதையடுத்து தற்போது புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. இதில் அதிமுகவும், தேமுதிகவும் 2வது முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளன. இம்முறை திமுக போர்க்களத்திலிருந்து பின்வாங்கி விட்டது. இதை ராஜதந்திர நகர்வாக அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
புதுக்கோட்டையில் நேருக்கு நேர் மோதவுள்ள அதிமுகவும், தேமுதிகவும் தங்களது பலத்தை எப்படி வெளிக்காட்டப் போகின்றன, வெல்லப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிகவுக்கு சிபிஎம் மட்டுமே நேரடியான ஆதரவைத் தரும் என்ற நிலை உள்ளது. இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி தொண்டர்களும் கூட மறைமுகமாக தேமுதிகவையே ஆதரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. காரணம், இவர்கள், தா.பாண்டியனின் பகிஷ்கார முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், திமுக என்ன செய்யப் போகிறது என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. முன்னாள் அமைச்சர் ரகுபதி சொன்னது போல 49 ஓ படிவத்தைப் பயன்படுத்துவார்களா அல்லது தேமுதிகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவை நெருக்கடியில் ஆழ்த்த முயல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மொத்தத்தில் தனது பலத்தை சற்றேனும் நிரூபித்து சங்கரன்கோவிலில் பட்ட அவமானத்தைத் துடைக்க தேமுதிக முயலக்க கூடும். அதேசமயம், சஙகரன்கோவிலை விட மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தனது பலத்தை மீண்டும் ஆணித்தரமாக நிரூபிக்க அதிமுகவும் முயலும்.
எனவே சங்கரன்கோவிலை விட மிகப் பெரிய மல்லுக்கட்டை புதுக்கோட்டை தேர்தல் களம் காணும் என்பதில் சந்தேகமில்லை,












Click it and Unblock the Notifications