காணாமல் போன சென்னை துறைமுக அதிகாரி எரித்துக் கொலை
சென்னை: சென்னை துறைமுக அதிகாரியான டெல்லி பாபு கடத்திச் செல்லப்பட்டு திருவண்ணாமலை அருகே மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த டெல்லி பாபு, சென்னை துறைமுகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். திருவள்ளூரில் உள்ள தமது உறவினரின் வீட்டுக்கு கடந்த 6-ந் தேதி சென்றுவிட்டு குடும்பத்தினருடன் திரும்பிய அவர் காரை நிறுத்துவதற்காக பார்க்கிங் இடத்துக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அவரது புகைப்படங்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சுடுகாடு ஒன்றில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தவரின் சடலம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரவாயல் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் டெல்லி பாபுவின் மனைவி ரம்யாவை திருவண்ணாமலைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது டெல்லி பாபு எனத் தெரியவந்தது.
நாள்தோறும் கார் பார்க்கிங்கில்தான் டெல்லி பாபு வாகனத்தை நிறுத்துவார் என்பதை தெரிந்து கொண்டவர்கள்தான் திட்டமிட்டு அவரை கடத்திக் கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications