புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும்: விஜயகாந்த் அறிவிப்பு

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன், சாலை விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூன் 12-ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளராக கார்த்திக் தொண்டமானை அறிவித்து களம் இறக்கியது அதிமுக. கடந்த முறை போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் இம்முறை போட்டியிடவில்லை என்று அறிவித்தது. இதேபோல் முக்கிய கட்சிகளான திமுக, மதிமுக, பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளும் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டன.
தேமுதிக போட்டி
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொடர்பாக தமது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று அவர் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட்டைப் பெற்றாவது தங்களது திராணியை நிரூபித்துவிடுவது என்று தேமுதிக முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications