புதுக்கோட்டையில் யாருக்கு வாய்ப்பளிப்பார் விஜயகாந்த்?
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வலுவான அதிமுகவுக்கு எதிராக யாரை விஜயகாந்த் களமிறக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு தேமுதிகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் அத்தனை கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது.
தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த்தான் ஒரே பலசாலி. எப்படி அதிமுக என்றால் ஜெயலலிதா, திமுக என்றால் கருணாநிதி, மதிமுக என்றால் வைகோவோ அதே போலத்தான் தேமுதிகவின் நிலையும். இந்தத் தலைவர்களின் முகத்தைப் பார்த்துத்தான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஓட்டுக்கள் விழுகின்றன. சொந்த செல்வாக்கு, பலம், தனித்துவம் கொண்ட வேட்பாளர்கள் என்று கிட்டத்தட்ட யாருமே எந்தக் கட்சியிலும் நிறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்டவர்களை தலைவர்களும் கூட பெரும்பாலும் விரும்புவதில்லை.
அந்த வகையில் கார்த்திக் தொண்டைமான் ரூபத்தில் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தல் களம் கண்டுள்ளார். அதேபோல விஜயகாந்த் சார்பில் யார் புதுக்கோட்டையில் நிற்கப் போவது என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போது வேட்பாளர் தேர்வில் விஜயகாந்த் மும்முரமாக உள்ளார். மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் பெயர் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், புதுக்கோட்டை தொகுதியில் முத்தரையர் சமூகத்தினர் அதிகம் உள்ளதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த விஜயகாந்த் முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
எனவே விஜயகாந்த் யாரை நிறுத்தப் போகிறார், நிற்பவர் வெற்றிகரமாக முரசு கொட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.