பாண்டிமாதேவி போல மாறி மதுரை ஆதீனத்தை ஜெ. மீட்க வேண்டும்- நெல்லை கண்ணன்
தருமபுரம் ஆதீன மடத்தின் மதுரை கிளை அலுவலகத்தில் மதுரை ஆதீனம் மடம் மீட்புக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் குழுத் தலைவர் நெல்லை கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை ஆதீனமாக சைவ வேளாளரை நியமனம் செய்ய வேண்டும். ஆனால், அகமுடைய முதலியாரான நித்தியானந்தாவை, ஆதீனமாக நியமித்துள்ளது சைவத்திருமடங்களின் விதிகளுக்கும், மரபுகளுக்கும் புறம்பானது.
நித்தியானந்தா ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதானவர். அவர் மீதான பாலியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் தான் பெண்மைக் குணம் உள்ளவர் என்றும், பிரம்மச்சாரி அல்ல என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார். அப்படிப்பட்டவரை எப்படி மதுரை ஆதீனம் இளைய ஆதீனமாக தேர்வு செய்தார்.
குற்றச்சாட்டு ஆளான நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமனம் செய்துள்ளது தவறான செயலாகும். எனவே, நித்தியானந்தா நியமனத்தை மதுரை ஆதீனம் திரும்ப பெற வேண்டும் என்று திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம் போன்ற ஆதீனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெருமை வாய்ந்த இது போன்ற மடங்களை, பிடதி ஆசிரம பக்தர்கள் முற்றுகையிடுவர் என நித்தியானந்தா கூறுவது அநாகரிகமான செயல்.
ரஞ்சிதாவிற்கும், தனக்கும், எந்த தொடர்பும் இல்லை எனக் கூறும் நித்தியானந்தா, மதுரை ஆதீன மடத்தில் ரஞ்சிதாவிற்கு முன்னிருக்கை அளிக்க ஏற்பாடு செய்தது ஏன்?
ஞானசம்பந்தர் அருளிய தேவாரம், திருவாசகம், திருமுறைகள் தெரியாத நித்தியானந்தாவை நியமித்தது தவறு. அவரது பிடியில், மதுரை ஆதீனம் உள்ளார். அவர், சிறைக்கைதியாக உள்ளார். ஆகவே, ஆதீன மடத்தை அமைத்த பாண்டிமாதேவி போல, தற்போது முதல்வர் ஜெயலலிதா ஆதீன மடத்தை மீட்க முன்வர வேண்டும்.
சைவ சமயத்துக்குத் துரோகம் இழைக்கும் வகையில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் தேர்வு செய்துள்ளார். ஆதீனத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, துடிப்புமிக்கவராக, பணபலம் நிறைந்தவராக இருப்பதால் நித்தியானந்தாவை ஆதீனமாக நியமித்ததாகக் கூறுகிறார். பணம் இருப்போரெல்லாம் ஆதீனமாக முடியுமெனில், கந்துவட்டிக்காரர்கள் எல்லாம் ஆதீனமாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.
மூத்த வழக்குரைஞர்களைக் கொண்டு சட்டரீதியாக ஆதீனத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்றார் கண்ணன்.
அவருடன் இருந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,
மதுரை ஆதீன மடம் மீட்புக் குழு சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு வேளாக்குறிச்சி ஆதீனம் தலைமை வகிக்கிறார். செங்கோல் ஆதீனம் முன்னிலை வக்கிறார். ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு ஆதீன மடத்தில் உள்ள திருஞானசம்பந்தரை வழிபடச் செல்கிறோம். அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை.
அதன்பின்னர், நெல்லை கண்ணன் தலைமையில் மேல-வடக்கு மாசி வீதி சந்திப்பில் ஆதீன மீட்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பின்னர், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சென்று வழிபாடு நடத்துவோம் என்றார்.
இதனால் மதுரையில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஆதீன மடத்தின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.