மீண்டும் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றார் திருமலை
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த திருமலை தற்போது தனு விலகல் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி திடீரென தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் திருமலை. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் இவர் பல்வேறு திட்டங்களை வகுத்து செம்மையாக செயல்பட்டு வந்தவர் என்பதால் அனைவரும் திருமலையின் ராஜினாமா முடிவால் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் பல்கலைக்கழக பணியாளர் சங்கம் இவருக்கு இடையூறாக செயல்பட்டு வந்ததால் அதிருப்தி அடைந்து தனது ராஜினாமா முடிவை இவர் எடுத்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மே 9ம் தேதி ஆளுநரை வந்து சந்திக்குமாறு திருமலைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்துப் பேசினார்.
அப்போது தனது ராஜினாமா கடிதத்தை திருமலை வாபஸ் பெறுமாறு ஆளுநர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதை ஏற்ற திருமலை தற்போது தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
துணைவேந்தர் பணியில் தொடர்கிறேன் என்று திருமலை தெரிவித்துள்ளார். இதனால் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications