நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி: பலி எண்ணிக்கை 16க உயர்வு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 16க உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் உள்ள தனிப்பிரிவில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி்ன்றனர். மறந்தையைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகள் சர்மிளா (4) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தாள். மேலும் சுந்தரபாண்டியபுரம் மறந்தை தெருவை சேர்ந்த குமார் மகள் சரண்யா (6) என்ற சிறுமியுள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளது.
இதுபோல் செங்கோட்டை வடகரையைச் சேர்ந்த அசன் மைதீன் (58) என்பவரும் காய்ச்சல் காரணமாக இரு நாட்களுக்கு முன்பு தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் 6 மாத குழந்தை முகிலா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி சேர்த்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 16க உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications