புதுக்கோட்டை: தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனா, சீனிவாசனா?

புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணமடைந்ததையடுத்து அத்தொகுதிக்கு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்கிடையே அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் ஏற்கனவே பிரச்சாரத்தை துவங்கி புதுக்கோட்டையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் போன்று இந்த தேர்தலிலும் அதிமுகவின் பண பலம் பேசும் என்று பிற கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதையடுத்து திமுக, சிபிஐ, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. ஆனால் தேமுதிக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. தொண்டர்களின் கருத்தைக் கேட்ட பிறகே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே தேமுதிக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். அதில் தேமுதிக மாவட் செயலாளர் ஜாகீர் உசேன், அவைத் தலைவர் சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் யார் என்பதை விஜயகாந்த் இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் திமுக தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் யாருக்கும் ஆதரவில்லை என்பதை கூற 49 (ஓ)வை பயன்படுத்த புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர் கட்சி தலைமையிடம் அனுமதி கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications