திருநங்கைகளுக்கு கட்டணமில்லாமல் பெயர் மாற்றம்: தமிழக அரசு

சட்டசபையில் செய்தித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,
அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரின் தமிழ்நாடு திரைப்படப்பிரிவு செய்திப்படங்கள் மின்னணு முறையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாக்கப்படும்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை, 26 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். அரசுக்குச் சொந்தமான தமிழரசு பத்திரிகை மற்றும் அரசு அச்சகங்களுக்கு ரூ. 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன தொழில்நுட்பத்துடன் இயந்திரங்கள் வாங்கப்படும்.
சமுதாயத்தாலும், குடும்பத்தினராலும் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி அல்லலுறும் திருநங்கைகளின் துயர் துடைக்கும் நடவடிக்கையாக, புரட்சித் தலைவி அம்மாவின் உத்தரவின்படி, திருநங்கைகளுக்கான பெயர் மாற்ற அறிவிப்புகள் கட்டணம் எதுவும் இல்லாமல் அரசிதழில் வெளியிடப்படும்.
வருவாய் இழப்பீட்டில் இயங்கி வரும் வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கத்தை குத்தகைக்கு விட உரிய விதிமுறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளியூர்களில் இருப்பவர்கள் அரசு வெளியீடுகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், திருச்சி, மதுரை அரசு கிளை அச்சகங்களில் அரசு வெளியீடுகளுக்கான கிளை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். அங்கேயே, பெயர் மற்றும் மத மாற்ற படிவங்களையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications