நித்யானந்தாவுக்கு எதிரான ஆதாரங்களுடன் மீண்டும் வழக்கு தொடர்வோம்: நெல்லை கண்ணன்

நித்யானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக நியமித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கண்ணன் பேட்டியளித்திருந்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு முன்பு தனது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று நித்யானந்தா அறிவித்திருந்தார். இதையடுத்து நெல்லை டவுன் பாரதியார் தெருவில் உள்ள கண்ணனின் வீட்டுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் நித்யானந்தா ஆதரவாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து நெல்லை கண்ணன் கூறியதாவது,
நித்யானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக்கியது சைவ மரபுக்கு எதிரானது. இது குறித்து தொடர்ந்த வழக்கை தவறென்று நீதிமன்றம் கூறவில்லை. முறைப்படி ஆதராங்களுடன் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் கூறியுள்ளது.
எங்களிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களுடன் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். மதுரை கோவிலை கைப்பற்றுவேன் என்று நித்யானந்தா கூறியிருந்தார். ஆனால் தற்போது அதை மறுக்கிறார்.
அவர் அவ்வாறு கூறியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலை அவர் கைப்பற்றுவேன் என்று கூறியது தவறு. நித்யானந்தாவே தான் ஒரு பிரம்மச்சாரி இல்லை என்று கூறியுள்ளார். பிரம்மச்சாரியாக இல்லாத ஒருவரை ஆதீனமாக நியமித்தது தவறு.
சைவ மட மரபு படி 12 நிலைகளை கடந்த பிறகு தான் ஒருவர் இளைய சன்னிதானமாக வர முடியும். ஆனால் அப்படி எதுவுமின்றி நித்தியானந்தாவை திடீர் என்று ஆதீனமாக்கியது தவறு என்றார்.












Click it and Unblock the Notifications