நான் ஆணும் அல்ல. பெண்ணும் அல்ல. ஆன்மிகமானவன்: நித்யானந்தா

மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா ஆதீன மடத்தில் இன்று சொற்பொழிவாற்றினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக என்னை நியமித்துள்ளார்கள். என்னை ஆதீனமாக்கியதை எதிர்த்து சிலர் போராடி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தை மீட்கப் போவதாகக் கூறி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
என்னை எதிர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்துள்ளோம். இது குறித்து முதல்வர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார். என்னைப் பற்றியும், மதுரை ஆதீன மடம் குறித்தும் தான் கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாக காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காஞ்சி மடத்தில் இருந்து தனது உதவியாளரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளது அவர்களுக்கு இடையேயான பிரச்சனை. அதற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
அதனால் ஜெயேந்திரர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ரஞ்சிதா தான் முடிவு எடுக்க வேண்டும். என்னை மதுரை ஆதீனமாக்கியதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சந்திப்போம். எதிர்ப்பாளர்களின் விமர்சனங்கள் கேலிக்கூத்தானது. நான் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. ஆன்மீகமானவன். அதனால் மதுரை ஆதீன மடத்தைவிட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன். தற்போது என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் என்னை ஆதரிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications