பெருந்தலைவர்கள் ஆதரிக்கிறப்ப நான் ஏன் பின்வாங்கனும்..: சங்மா கேள்வி
டெல்லி: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் என்ற இரு பெரும் தலைவர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக என்னை அறிவித்துவிட்ட நிலையில் ஏன் போட்டியிலிருந்து பின்வாங்கப் போகிறேன் என்று கேள்வி அனுப்பியுள்ளார் பி.ஏ.சங்மா.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சங்மா கூறியதாவது:
ஜெயலலிதா, நவீன் பட்நாயக் இரு பெரும் தலைவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து அறிவித்துவிட்டனர்; நான் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போது நிலைமை வேறு.
அவ்விரு தலைவர்களும் ஆதரித்ததோடு அல்லாமல் மற்ற தலைவர்களிடமும் ஆதரவு கோரியிருக்கின்றனர். பல கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரையும் சந்திக்க நேரம் ஒதுக்கக்கேட்டிருக்கிறேன். அவர்களிடமும் ஆதரவு கோருவேன். கட்சி சார்பாக இல்லாவிட்டாலும் சுயேச்சையாகவாவது போட்டியிட்டே தீருவேன் என்றார் சங்மா.
இதனிடையே சொந்த கட்சியே ஆதரிக்காத நிலையில் சங்மாவை எப்படி ஆதரிக்க முடியும்? என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கேள்வி எழுப்பியதுடன் சங்மாவை ஆதரிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியாவும்கூட சங்மாவை சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications