ஜனாதிபதி தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளருக்கே ஆதரவு- கருணாநிதி

சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
கேள்வி: மத்திய அரசு இன்றோடு மூன்றாண்டுகளை முடித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறதே, அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்: மத்திய அரசின் சார்பில் தமிழகத்திலே நிறைவேற்றப்படும் 15 நிலைத்த நலத் திட்டங்களுக்காக 2005-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் ரூ.36,688 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2015-ம் ஆண்டுகளுக்காக ரூ.83,432 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், ஒதுக்கவும் உள்ளது. இதனால் மத்திய அரசினால் தமிழக அரசு வஞ்சிக்கப்படுகிறது என்பதில் அர்த்தம் கிடையாது.
குடியரசுத் தலைவர் தேர்தல்
கேள்வி: குடியரசுத் தலைவர் வேட்பாளரைத்தேர்வு செய்வதற்காக 23-ந்தேதி டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்கிறீர்களா?
பதில்: அதைப்பற்றி விவரம் தெரியவில்லை.
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் வேட்பாளர் யார்?
பதில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றுள்ளது. எனவே கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுகிறாரோ, அவரை நாங்கள் ஆதரிப்போம்.
புதுக்கோட்டைத் தேர்தல்
கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. உங்கள் ஆதரவைக் கேட்டால் கொடுப்பீர்களா?
பதில்: கேட்டால் பார்த்துக் கொள்ளலாம்.
காவிரியில் முரண்கள்
கேள்வி: கர்நாடகத்தில் பெண்ணை ஆற்றில் அணை கட்டுவது குறித்து காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?
பதில்: காவிரி ஆணையம் அமைந்தபோது, அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று இதே ஜெயலலிதா தான் கூறினார். காவிரி ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தையே இவர் தவிர்த்தார். ஆணையமே வேண்டாம் என்றால், இப்போது ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்கிறார். இப்படியெல்லாம் முன்னுக்குப்பின் முரணாக செயல்படுகிறார் என்றபோதிலும், காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என்றார் அவர்.
பணிகளைச் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை:
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில், சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைந்த பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ. 332.27 கோடியில் 32 பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. இரண்டு முறை ஒப்பந்தம் கோரியும் 9 பணிகளைச் செய்ய யாரும் முன்வரவில்லை. 3-வது முறையாக ஒப்பந்தம் கோரியபோதும் 5 பணிகளைச் செய்ய யாரும் வரவில்லை. சென்னையில் 1,075 இடங்களில் நிழற்குடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் 585 பணிகளைச் செய்ய யாரும் முன்வரவில்லை.
மாநகராட்சிப் பணிகள் மட்டுமல்ல நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பணிகளைச் செய்யவும் ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத் தலைவரிடம் இதுபற்றி கேட்டபோது, கவுன்சிலர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வேண்டியவர்களுக்கு மட்டுமே வேலை என்கிற நிலை உள்ளதால் பணிகளைச் செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இதையெல்லாம் கவனிக்க ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லையா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications