மமதா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவை உலுக்கிய பெட்ரோல் விலை உயர்வு எதிர்ப்பு பேரணி
பெட்ரோல் விலை உயர்வை கடந்த புதன்கிழமையன்று எண்ணெய் நிறுவனங்கல் அறிவித்த உடனேயே கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தவர் மமதா பானர்ஜி. மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.
மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மமதா தலைமையில் பிரம்மாண்ட கண்டன பேரணி நடைபெற்றது. கொல்கத்தா நகரே அதிரும் வண்ணம் நடைபெற்ற இந்தப் பேரணி 5 கி.மீ. தூரத்துக்கு நடைபெற்றது.
மேற்கு வங்க முதல்வரான பிறகு மத்திய அரசின் முடிவைக் கண்டித்து மம்தா பானர்ஜி, தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய், கட்சியின் மாநிலத் தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் முதல் ஹஸ்ரா சந்திப்பு பகுதி வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வாசக அட்டைகளுடன் பலர் பங்கேற்றனர். முன்னதாக பெட்ரோல் விலை உயர்வு குறித்து கருத்துத் தெரிவித்த மம்தா, "மத்திய அரசின் இந்த முடிவு முற்றிலும் நியாயமற்றது.சாதாரண மக்கள் மீது மேலும், மேலும் சுமை ஏற்றுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது' என்று தெரிவித்தார்.