யாரும் நினைத்துப் பார்க்காத நிலையில் ஒபாமா அதிபரானது போல் நானும் ஜனாதிபதியாக முடியாதா?:: பி.ஏ.சங்மா

குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரால் பி.ஏ.சங்மா வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் சங்மா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்யக்கூடிய அளவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ போதிய பலம் இல்லை. எனவே என்னை பொது வேட்பாளராக அறிவிக்க கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபர் ஆவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அந்த இனத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்க அதிபர் ஆகும் போது, இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக முடியாதா?
சென்னை செல்லும் வரை நான் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இல்லை. அங்கு சென்ற பிறகு, தேர்தலில் போட்டியிட தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். சோனியா, மன்மோகன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டிருக்கிறேன்.
எனக்குப் பலம் இருக்கிறதா? இல்லையா என்பதைவிட குடியரசுத் தலைவர் தேர்தல் ஒரு ரகசிய வாக்கெடுப்பு முறை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மேலும் நாட்டின் பிரதமர் என்பவர் எப்பொழுதுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவராகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications