இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!

இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.
இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,
தேமுதிக வைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.
ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.
யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.
இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.












Click it and Unblock the Notifications