சங்கர மடத்தை அரசுடமையாக்க தமிழக மனித உரிமைகள் கழகம் கோரிக்கை!
மதுரை: காஞ்சி சங்கர மடத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று தமிழக மனித உரிமைகள் கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக மனித உரிமைகள் கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் எம்,ஜெயராமன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஆதி சங்கரரால் துவக்கி வைக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய பீடாதிபதியான ஜெயந்திரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. குற்றங்களின் உச்சமான கொலைக் குற்றச் சாட்டு கூட பதிவு செய்யப்பட்டதை அனைவரும் அறிவோம்.
தற்சமயம் கொலை வழக்கில் நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்து, ஒவ்வொரு மாதமும் நீதிமன்ற வாய்தாவிற்காக சென்று வருவதையும் அனைவரும் அறிவோம்.
தற்போதைய காஞ்சி இளைய பீடாதிபதி மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்தும் அனைவரும் அறிவோம்.
இப்படி தொன்மைவாய்ந்த காஞ்சி மடத்தினை நிர்வகிக்கும் தகுதி இந்த இருவருக்கும் இல்லை என்பது தான் நிதர்சமான உண்மை. எனவே, தமிழக அரசு இந்த தொன்மைவாய்ந்த காஞ்சி சங்கர மடத்தினை நிர்வகிக்க தகுதியற்ற ஜெயேந்திரரையும், இளையவரையும் நீக்கிவிட்டு இந்து அறநிலையத் துறையின் மூலம் கையகப்படுத்த வேண்டும்.
காஞ்சி மடத்தின் அனைத்து அசையும், அசையா சொத்துக்களையும் தமிழக அரசே ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்து நிர்வகிக்க வேண்டும்.
ஓராண்டு ஆட்சியில் நூறாண்டு சாதனைகள் செய்த தாங்கள் உடனே இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்தி காஞ்சி மடத்தினை அரசுடைமையாக்குவீர்கள் என்று நம்புகின்றோம் என்றுஅதில் கூறியுள்ளார் ஜெயராமன்.












Click it and Unblock the Notifications