சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஜெகன் மோகன் ரெட்டிக்கு 14 நாள் ஜெயில்!

சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக ஜெகன் மோகன் ரெட்டி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் இன்றுகாலை பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் ஜெகன் மோகன் ரெட்டியை 14 நாள் சிறைக் காவலில் வைக்க சிபிஐ நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட்டுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வரப்பட்ட தகவல் பரவியதும் அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளாக கோர்ட் வளாகத்திற்கு வெளியே கூடினர். இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. ஜெகனின் வக்கீல் விஜய் சாய் ரெட்டியுடன், ஜெகனின் மனைவி பாரதி ரெட்டி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கோர்ட்டுக்குள் சென்றார்.
கடையடைப்புக்கு ஆதரவில்லை
முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி கைதைக் கண்டித்து இன்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு அவரது கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்திற்குப் பெரிய அளவில் ஆதரவில்லை. தெலுங்கானா பகுதியில் சுத்தமாக ஆதரவில்லை. தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிரானவர் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கடப்பா நகரிலும், ராயலசீமா, கடலோர ஆந்திர மாவட்டங்களிலும் லேசான பதட்டம் காணப்படுகிறது. இருப்பினும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. சில இடங்களில் கல்வீச்சு, பஸ்கள் மீது தாக்குதல் ஆகியவை நடந்துள்ளன.
ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு
தெலுங்கானா பகுதிக்குட்பட்ட ஹைதராபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கடையடைப்பால் எந்தவித பாதிப்பும் இல்லை. பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.












Click it and Unblock the Notifications