பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த திருமா
சென்னை: மத்திய அரசு ஒரேயடியாக பெட்ரோல் விலையை உயர்த்தியதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி கடந்த 23ம் தேதி உத்தரவிட்டது. இந்த விலை உயர்வை பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாளை அதிமுகவும், நாளை மறுநாள் திமுகவும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சென்னை தீவுத்திடலில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு மெமோரியல் ஹால் வரை ஊர்வலமாக சென்றார். அவருடன் அக்கட்சி நிர்வாகிகளும் மாட்டு வண்டியில் பயணித்தனர்.
ஊர்வலம் மெமோரியல் ஹாலை அடைந்ததும் அதன் முன்பு திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் 18 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல் மீதான வரியை மாநில அரசு குறைத்தால் விலை ஓரளவு குறையும். எனவே, மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications