பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து 31ல் கடையடைப்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு
சென்னை: பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் வரும் 31ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் கடையடைப்பு போராடத்தில் குதிக்கின்றது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. இந்த போராட்த்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம். அனைத்து பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை உயர்வால் பொது மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை முறியடிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதிலிருந்து இந்த போராட்டம் அரசியல் நோக்கம் இல்லாதது என்பதும், மக்கள் நலன்,தேச நலன் சார்ந்தது என்பதும் தெளிவாகிறது.
எனவே, சாதாரண மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் 31ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கலந்து கொள்ளும்.
அதே நேரம் ஜுன் 1ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் மக்கள் வசதியைக் கருத்தில் கொண்டு வரும் 31ம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே கடைகளை அடைத்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications