10க்கு 10 அடி அறையில் படுத்து உறங்கும் ஜெகன்!
ஹைதராபாத்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, குறுகலான சிறை அறையில் படுத்து உறங்குவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள சன்சல்குடா மத்திய சிறையி்ல் கைதி எண் 6093 வழங்கப்பட்டு ஜெகன் மோகன் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் பெரும் பணக்காரர்கள் வாழும் பஞ்சரா ஹிப்ஸ் பகுதியி்ல 32 ஏக்கரில் உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்த ஜெகன், தற்போது சிறையில் 10க்கு 10 அடி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது வெயில் காலம் என்பதால் சிறை அறைகளில் கடும் வெப்பமாக உள்ளது. இதனால் குறுகலான அறையில் படுத்து உறங்க, ஜெகன் மிகவும் சங்கடப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது
நாட்டின் மிகவும் பணக்கார எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிறையில் சிறப்பு அறை ஒதுக்கி உள்ளோம். 10க்கு 10 அடி அளவு கொண்ட இந்த அறையில் கழிவறை வசதி, மெத்தை, தலையணை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள டிவி வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே பார்க்க முடியும் என்றனர்.