சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இன்றுடன் தீரும்: ஜெயலலிதா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டினை நீக்குவது குறித்து இன்று பிற்பகல் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மங்களூரில் உள்ள மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பணிகள் கடந்த 10 நாட்களாக முடங்கிப் போயிருந்ததாலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வர வேண்டிய டீசல் வராததாலும், பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அதிகரித்துள்ளதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொச்சியிலிருந்து கப்பல்கள் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவை இன்று பிற்பகல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த பெட்ரோல் மற்றும் டீசலை சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கும் உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 கிலோ லிட்டர் டீசல் பெங்களூரிலிருந்து சாலை வழியாக சென்னைக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு கூடுதலாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
சென்னைக்கு நாளொன்றுக்கு சுமார் 2,100 கிலோ லிட்டர் பெட்ரோலும், 2,500 கிலோ லிட்டர் டீசலும் தேவைப்படுகிறது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 67,000 கிலோ லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் உடனடியாக பெட்ரோல் பங்குகளுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சென்னை நகரில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இன்று முதல் தீர்ந்துவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்- நீதிமன்றத்தில் வழக்கு:
இதற்கிடையே, வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னையில் நிலவிவரும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல் விலையை உயர்த்தியது மட்டுமின்றி செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதில் நீதிமன்றம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications