முல்லைப் பெரியாறு அணையில் தமிழக காவல்துறை: ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்கு பழ. நெடுமாறன் வரவேற்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்தாவிட்டால் தமிழக காவல்துறையை நிறுத்த நேரிடும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை பரிசோதிக்க உச்சநீதிமன்றம் அமைத்த ஆலோசனைக்குழு அணையின் 8 இடங்களில் துளையிட்டு சோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாக கூறிவிட்டது. அந்த துளைகளை மூடவிடாமல் தமிழக அதிகாரிகளை கேரள காவல்துறையினர் தடுத்து திருப்பியனுப்பியதை கண்டிக்கும் வகையில், பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், கேரள அரசு அடாவடியாக நடந்தகொள்வதை தடுக்கும் வகையில் அணையின் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் தமிழக காவல்படையை அனுப்ப நேரிடும், என எச்சரிக்கை விடுத்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் துணிவை வரவேற்று பாராட்டுகிறேன்.
பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி விட்டது என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது. முதலமைச்சர் எச்சரித்துள்ள படி தமிழக காவல்துறையை பெரியாறு அணை பகுதியில் உடனடியாக நிறுத்தவேண்டும். பெரியாறு அணையிலும், அருகிலுள்ள பேபி அணையிலும் கேரள அரசால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அனைத்து மராமத்து பணிகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அணைப்பகுதியில் தமிழகம் குத்தகை செலுத்தி வருகிற நிலப்பரப்பில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றும் பணியினையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications