நாளை 'பாரத் பந்த்': பெங்களூர் ஸ்தம்பிக்கும்!
பெங்களூர்: பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாளை பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் காரணமாக பெங்களூரில் இயல்பு வாழ்க்கை முடங்கலாம் என்று தெரிகிறது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடந்து வருவதாலும், முதல்வராக உள்ள சதானந்த கெளடா கட்சியின் தலைமையிடம் நல்ல பெயரை வாங்கும் முயற்சியில் இருப்பதாலும் பந்த் முழு அளவில் இருக்கலாம் என்று தெரிகிறது.
பெங்களூரில் நாளை அரசு பிஎம்டிசி பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் கர்நாடகம் முழுவதும் கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏதாவது ஒரு இடத்தில் ஒரு பஸ் மீது கல் விழுந்தாலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படலாம்.
அதே போல ஆட்டோ ஓட்டுனர்கள் பந்த்தை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நிலைமைக்கு ஏற்றபடி அவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது. பஸ்கள் இயங்காமல் போனால் அல்லது மிகக் குறைவான பஸ்களே இயக்கப்பட்டால் ஆட்டோ டிரைவர்கள் களத்தில் குதித்து 3 மடங்கு கட்டணத்தை வசூலிக்கப் போவது நிச்சயம்.
பெட்ரோல் பங்குகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் அவை மூடப்படலாம் என்றே தெரிகிறது.
அதே போல பள்ளி, கல்லூரிகளும் மூடப்படவுள்ளன. வங்கிகள், அரசு அலுவலங்களும் இயங்காது என்றெ தெரிகிறது.
ஹைதராபாத்தில்...
ஆந்திராவில் இந்த பந்துக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் மீது கடுப்பில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களும் புகுந்து விளையாட வாய்ப்புள்ளதால், ஆந்திராவில் பந்த் ஓரளவுக்கு நிச்சயம் வெற்றி பெரும் என்றே தெரிகிறது.