நிதின் கத்காரியால் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தி: அத்வானி தாக்கு

சமீபத்தில் அத்வானியின் அதிருப்தியையும் மீறி கட்காரியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்சின் தலையீடு காரணமாக கட்காரிக்கு இந்தப் பதவி நீட்டிப்பு கிடைத்தது.
ஏற்கனவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தரப்பும் முக்கியத்துவத்தால் கட்சியில் அத்வானியின் முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இப்போது கட்காரியும் அத்வானியின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜக தேசிய அளவில் பந்த் நடத்திக் கொண்டிருந்த நிலையில் அத்வானி தனது பிளாக்கில் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகள் மற்றும் ஊழல்கள் அதன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நமது செயல்பாடுகளால் நம் மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
கட்சியில் இப்போது தன்னம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த தோல்வி, மாயாவதியால் நீக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளை நமது கட்சியில் சேர்த்தது, கர்நாடகம் (எதியூரப்பா ஊழல் விவகாரம்), ஜார்க்கண்ட்டில் (எம்பிக்கள் விலை பேசப்பட்டது, ராஜ்யசபா தேர்தலில் கட்சிக்கே சம்பந்தமில்லாத ஒருவர் நிறுத்தப்பட்ட) கட்சி விவகாரங்கள் கையாண்ட விதம் ஆகியவற்றால் மக்கள் நம் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்துக்கு இந்த விஷயங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டன.
நானும் ஒரு முன்னாள் பத்திரிக்கையாளன் என்ற முறையில் மக்களின் உணர்வுகளை புரிந்து வைத்துள்ளேன்.
1984ம் ஆண்டில் பாஜகவுக்கு 2 எம்பிக்களே இருந்தனர். தற்போது குறிப்பிடத்தக்க அளவில் எம்பிக்களைப் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளன என்று எழுதியுள்ளார் அத்வானி.
அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் இருவரும் கத்காரிக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை வகுத்தது, மாயாவதியால் நீக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளை கட்சியில் சேர்த்தது, கர்நாடகா, ஜார்க்கண்ட் விவகாரங்களைக் கையாண்டது எல்லாமே கத்காரி தான்.
எனவே, அத்வானி கத்காரி மீது தான் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications