மகனை சரியாக வளர்க்கவில்லை- ஜெகனின் தாயார் மீது சந்திரபாபு நாயுடு தாக்கு
ஹைதராபாத்: இமாலய தவறு செய்த மகனுக்காக விஜயலட்சுமி நீலிக் கண்ணீர் வடித்து பிரசாரம் செய்கிறார். இதைப் பார்த்து ஆந்திர மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏழுர் தொகுதியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியை குறைகூறியும் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து ஜெகனை கைது செய்தனர்.
சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு நியாயமானது. சிபிஐயின் இந்த செயலை ஜெகனின் தாயார் விஜயலட்சுமி குறை கூறி வருகிறார். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சாதாரண மனிதர்கள் ஜெகனின் ஊழலை சகித்துக்கொள்ள மாட்டார்கள். விஜயாம்மா தனது மகனை சரியாக வளர்க்கவில்லை. சரியாக வளர்த்திருந்தால் ஜெகன் இந்த அளவுக்கு சொத்து குவித்திருக்க மாட்டார்.
மகனின் தவறுகளை மறைக்கவே விஜயலட்சுமி நீலிக் கண்ணீர் வடித்து பிரசாரம் செய்கிறார். இதைப் பார்த்து ஆந்திர மக்கள் ஏமாற மாட்டார்கள். அதேபோல் ஜெகன் சொத்துக் குவிப்பதற்கு காங்கிரசும் உதவியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் இன்றைக்கும் ஜெகனுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications