கட்சி துரோகிகளை பட்டியலிட்டு கொன்றதாக பேசிய சிபிஎம் செயலாளர் தலைமறைவு
திருவனந்தபுரம்: கட்சி துரோகிகளை பட்டியல் போட்டு கொன்றதாக பேசி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் மணி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரன் என்பவர் சில வாரங்களுக்கு முன் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது. சந்திரசேகரன் கொலை சம்பவம் மூலம் கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இடு்க்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாலரான எம்.மணி தொடுபுழாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், கட்சி துரோகிகளை பட்டியல் போட்டு கொன்றதாக பேசினார்.
மணியின் பேச்சு கேரளாவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே மணி மீது தொடுபுழா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் மணி விரைவில் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் நேற்று முதல் மணி திடீரென மாயமாகிவிட்டார். அவரது செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மணி தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications