திருப்பூர்- கோவையில் பந்த்துக்கு ஆதரவு: ஆலைகள் மூடல்- ஜவுளி தொழில் முடங்கியது!
கோவை: தமிழகத்தில் பாரத் பந்துக்கு திருப்பூர் பகுதிகளில் மட்டும் கொஞ்சம் ஆதரவு கிடைத்துள்ளது.
பாஜக அழைப்பு விடுத்த இந்த பந்துக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்ததால் திருப்பூரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் சுமார் 6,500 ஜவுளி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.
அதே போல பிரிண்டிங் நிறுவனங்கள், எம்பிராய்டரி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஹோட்டல்கள், பேக்கரிகள், கடைகளும் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களில் பகல் காட்சி சினிமா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பஸ், லாரி, ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.
அதே போல கோவை மாவட்டத்திலும் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடியுள்ளன.
அதே நேரத்தில் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. அங்கு பந்த்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.
கோவையில் மறியல்:
இந் நிலையில் கோவையில் ரயில் மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட பாஜக மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வக்குமார் உள்ளிட்ட 128 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications