இலங்கை, ஈரான் புதிய ஒப்பந்தம்.. இரு நாட்டவரும் விசா இன்றி போய் வரலாம்!
கொழும்பு: இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய இந்த இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 30, 31ம் தேதிகளில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் 16வது அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமது நிஜாடின் விடுத்த அழைப்பு கடிதத்தை அவர் கொடுத்தார்.
இலங்கை மற்றும் ஈரான் சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதற்கு ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் அவர் கலந்து கொண்டார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை விரிவுபடுத்தவும் குறிப்பாக தேயிலை ஏற்றுமதி மீதான வரிகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.