அரிசி கடத்தலை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகளை கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்
நாகர்கோவில்: கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற அரசு அதிகாரிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற அரிசி கடத்தும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் 4 அதிகாரிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று நாகர்கோவிலை அடுத்த காட்டத்துறை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, நாகர்கோவில் மாவட்ட வழங்கல் அதிகாரி பன்னீர் செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று அதிகாலையில் துணை தாசில்தார் அப்துல்லா மன்னான்(42), வருவாய் ஆய்வாளர்கள் ராதா கிருஷ்ணன்(28), செய்யது அலி(38) ஆகியோருடன் நாகர்கோவில் மாவட்ட வழங்கல் அதிகாரி பன்னீர் செல்லம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அதிகாலை 2.30 மணியளவில் காட்டாத்துறை அருகே ஜீப்பில் சென்றவாறு அவ்வழியாக வந்த வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது அசுர வேகத்தில் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு, அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் காரில் வந்தவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனையடுத்து வேகமாக சென்ற காரை, அதிகாரிகள் ஜீப்பில் சென்று துரத்தினர். காரை முந்தி சென்று ஜீப்பில் இருந்தவாறு காரை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறினர். ஆனால் காரில் இருந்தவர்கள், அதிகாரிகள் வந்த ஜீப் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதியது.
இதில் ஜீப்பில் இருந்த மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி பன்னீர் செல்வம், துணை தாசில்தார் அப்துல்லா மன்னான், வருவாய் ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், செய்யது அலி ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். ஜீப்பை ஓட்டி வந்த ஓட்டுநர் நாகராஜன் மட்டும் காயமின்றி உயிர் தப்பினார்.
காயமடைந்த 4 அதிகாரிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி சென்ற ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications