பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி மாற்றம்: அண்ணா பல்கலை
சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்யப் போவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு(பொது பிரிவினருக்கு) வரும் 9ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த தேதி மாற்றம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்தது. 2 லட்சத்து 29,000 மாண-மாணவியர் விண்ணப்பங்கள் வாங்கியுள்ளனர். இதில் பொதுப் பிரிவினருக்கு வரும் 9ம் தேதி முதல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது அந்த தேதியை மாற்றவிருக்கிறோம்.
வழக்கமாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு துவங்கிய பிறகே பி.இ., பி.டெக் கலந்தாய்வு துவங்கும். இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஜூன் முதல் வாரத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூடி புதிய கலந்தாய்வு தேதியை முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications