புதுக்கோட்டையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்: பிரவீண்குமார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தலை சுமூகமான முறையில் நடத்தத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இடைத்தேர்தலையொட்டி புதுக்கோட்டையில் 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 1,098 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தலை நடு நிலையுடன் நடத்தும் முயற்சியாக மூன்று தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போடும் போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை மட்டுமே வாக்குச் சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டும். வேறு எந்த அடையாள அட்டைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பணியாளர்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை கொண்டு சென்று ஓட்டுப் போடலாம். அனைத்து வாக்காளர்களுக்கும் அதிகாரிகள் மேற்பார்வையில் வரும் 8ம் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.