இளைஞர் காங். தலைவர் கொலை: சிபிஎம் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் மீது வழக்கு
கொல்லம்: 1982ம் ஆண்டு கேரளாவில் கொல்லப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஞ்சேரி பேபி கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜெயச்சந்திரன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கியவர் சந்திரசேகரன். அவர் கடந்த மாதம் வயநாடு பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிலரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் மணி கட்சிக்கு எதிராக நடந்தவர்களை கட்சி பட்டியலிட்டு கொன்றுள்ளது, 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 10 பேர் பாக்கியுள்ளனர் என்று பேசினார். அவரது பேச்சு அகில இந்திய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இது தொடர்பாக கேரள போலீசார் மணி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு வருமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையை மணியின் பேச்சுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக உடும்பன்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜெயசந்திரன், கட்சியி்ன் முன்னாள் செயலாளர் மதனன், கமிட்டி நிர்வாகி தாமோதரன் ஆகியோர் மீது இடுக்கி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1982ல் நடந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஞ்சேரி பேபி கொலை வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கூட்டு சதி, கூட்டாக சேர்ந்து கொலை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications