ஜெ.வை திட்டியதாக விஜயகாந்த் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்ற அதிமுக பிரமுகர்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேட்டி அளித்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு தலைவரும், வழக்கறிஞருமான வி.ஞானமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 504, 505(1), 506(1) ஆகிய பிரிவுகளின்படி குற்றமாகும்.
எனவே இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜயகாந்துக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்தேன். ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தேமுதிக வழக்கறிஞர் நமோ நாராயணன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ். நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது.
ஞானமுத்து சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஞானமுத்துவின் அறிவுரையின்படி மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார். ஆனால் நமோ நாராயணன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜயபாஸ்கர் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.