தேனி அருகே பீடி பற்றவைத்த தீயில் 2 குழந்தைகளின் தாய் உடல் கருகி பலி
தேனி: தேனி அருகே பீடி பற்றவைத்த தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் ஏற்பட்ட தீவிபத்தில் இளம் பெண் பரிதாபமாக பலியானார்.
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி. பெயிண்டர். அவரது மனைவி மீனா(32). கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சஞ்சீவி தனது வீட்டில் பெயிண்ட், வார்னிஷ் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பீடியை பற்ற வைத்த அவர் தீக்குச்சியை அணைக்காமலே தரையில் போட்டுவிட்டார். அந்த தீக்குச்சி தரையில் கொட்டிக் கிடந்த வார்னிஷில் பட்டு தீப்பிடித்தது. இந்த தீ அங்கு உட்கார்ந்திருந்த சஞ்சீவி மற்றும் அவரது மனைவி மீனா மீது பிடித்தது.
பலத்த தீக்காயங்களுக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மீனா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து பழனிச்செட்டிப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் ஜோதிசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.