குழாய் எரிவாயு திட்டத்துக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்துவதா? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொச்சி - பெங்களூர் இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான பாதை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் வழியே அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியே இந்தப் பாதை அமைக்கப்பட இருக்கிறது. ஆனால் இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம், கல்லான் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.மோகன பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலங்களிடையே எரிவாயு பாதையை அமைப்பதற்காக எனக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்பட பல விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே விவசாய நிலங்கள் குறைவுபட்டு வரும் சூழ்நிலையில், விவசாய நிலத்தை விட்டுவிட்டு வேறு நிலங்கள் வழியாக பாதை ஏற்படுத்தலாம். அந்த வகையில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை அமல்படுத்தும்படி, கெயில் இந்தியா நிறுவனத்திடம் கோரிக்கை மனு கொடுத்தோம்.
கெய்ல் மீது புகார்
அதோடு விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்கியும், எதிர்ப்பை எழுத்துபூர்வமாக தெரிவித்தும் கெயில் இந்தியா நிறுவனத்துக்கு மனு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை அவர்கள் நடத்தினர். ஆனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துகளை அந்த நிறுவனம் கேட்கவில்லை. பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயியையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். அதையும் அந்த நிறுவனம் ஏற்கவில்லை.
மேலும் கடந்த மார்ச் 26-ந் தேதி கெயில் இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கவும் முடிவு செய்துவிட்டது. இது முழுவதும் சட்டவிரோதமானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் மீண்டும் பொது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், மனுவுக்கு பதிலளிக்கும்படி, பெட்ரோலிய அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications